தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்!
இன்று தமிழ் மக்களைத் தலைமை தாங்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பல்வேறுபட்ட போராட்டங்களில் உங்களை இணைத்துக்கொண்டு பல அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளனர்.
மே, 19 2009 வரையும் நீங்கள் ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களினால் மாறுபட்ட கருத்துக்களுடன் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். உங்களில் பலருக்கு உங்களுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் இருந்துள்ளன. ஆனால் மே 19, 2009க்குப் பின் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் உங்கள் ஒவ்வொருவருடைய ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தி நிற்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் எமது இனத்தின் உரிமை அல்லது விடுதலை என்கின்ற நிலைப்பாட்டில் எவ்வளவு இதய சுத்தியோடு ஈடுபட்டீர்கள் என்பதனை இந்த ஒற்றுமையில் நீங்கள் காட்டும் ஆர்வம் வெளிப்படுத்தும்.
கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில், குறிப்பா மே 19, 2009 வரையான இறுதி யுத்தத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தில் அனுபவித்த துயரங்கள், இன்றும் தடுப்பு முகாம்களுக்கு உள்ளேயும், வெளியேயும் இன்றுவரை அனுபவித்துவரும் சொல்லொணாத் துன்பங்கள் யாவரும் அறிந்ததே. அவர்களின் துயர் துடைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
இலங்கையில் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த எம்மக்கள் உரிமை இழந்து, உடமை இழந்து, உறவுகளை இழந்து, உணர்வின்றி காலத்திற்குக் காலம் பேரினவாத அரசுகளினால் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் காலத்துக்குக் காலம் தமிழ் தலைமைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக சிந்திக்கின்ற நிலை உருவாகும் போதெல்லாம் ஒவ்வொரு தேர்தல்களை அறிவித்து அந்த ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு கச்சிதமாக மேற்கொண்டு வருகிறது.
அதே நிலையைத்தான் இன்றும் அரசு தோற்றுவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரு சில விடயங்களிலாவது கொள்கையளவில் ஒற்றுமைப்பட்டு செயற்படக்கூடிய நிலைப்பாட்டை எடுத்தபோது, தற்பொழுது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறு இருக்க வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள மொழித் திணிப்புகள், கொலைகள், ஆட்கடத்தல்கள் என பல்வேறுபட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்விடயங்களில் இருந்து தமிழ்த் தலைவர்களின் கவனங்களை திசை திருப்பும் ஒரு யுக்தியாகவும் இத்தேர்தல் அமைகின்றது.
எது எவ்வாறாயினும் எமது மக்கள் உரிமையுடனும், சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு@ நாம் அனைவரும் தேர்தல் அரசியல் என்பதற்கு அப்பால், உரிமைப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வடக்குக் கிழக்குப் பிரதேச நிருவாகங்களை பெரும்பான்மைக் கட்சிகள் நிருவகிக்கும் நிலையைத் தோற்றுவிக்காமல்@ தனிப்பட்ட கோபாதாபங்களை விடுத்து, துன்பப்பட்டு இருக்கும் எமது மக்களின் நலனுக்காக சுயநல அரசியலை விடுத்து, விட்டுக்கொடுக்கும் மனிப்பான்மையுடன் ஓரணியில் நின்று செயற்படும் வண்ணம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். இதுவே இன்றுள்ள சூழ்நிலையில் எமது மக்களுக்கு விடிவைத் தரக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும்.
இதனை நாம் உணர மறுத்து சுயநல அரசியலுக்காகப் பிரிந்து நிற்போமேயானால்@ எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு எமது பூர்வீகப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
ஆகவே தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுமைப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வண்ணம்
ஓற்றுமைக்கும் சமாதானத்துக்கும் பிரித்தானியத் தமிழர் அமைப்பு.
British Tamil Forum for Unity and Peace - BTFUP
ஜனவரி 12, 2011
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment